வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

எறும்புகளோடு பேச்சுவார்த்தை -வைரமுத்து

எறும்புகளே எறும்புகளே 
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே 
பத்துகோடி ஆண்டுகள் முன்னே 
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே 
உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே 
உங்களோடு பேசவேண்டும் 
சிறிது நேரம் செவி சாய்ப்பீரா?


"நின்று பேசி நேரங்கழிக்க 
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை 
எது கேட்பதாயினும் 
எம்மோடு ஊர்ந்து வாரும் "

ஒரு செண்டிமீட்டரில் 
ஊற்றி வைத்த உலகமே 
அற்ப உயிரென்று 
அவலபட்டதுண்டா ?

"பேதை மனிதரே 
மில்லிமீட்டர்   அளவிலும் 
எம்மினத்தில் உயிருண்டு 
தன் எடை போல ஐம்பது மடங்கு 
எறும்பு சுமக்கும் நீர் சுமபீரா"
***
உங்கள் பொழுது போக்கு 


"வாழ்வே பொழுதுபோக்கு 
தேடலே விளையாட்டு 
ஊர்தலே ஓய்வு 
ஆறு முதல் பத்துவாரம் 
ஆயுள் கொண்ட வாழ்வு -இதில் 
ஓயவேன்ன ஓய்வு ?-தலை 
சாய்வென்ன சாய்வு ?"
**
இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?

"உம்மை போல் எமக்கு 
ஒற்றை வயிறல்ல 
இரட்டை வயிறு 
செரிக்க ஒன்று 
சேமிக்க ஒன்று 
செரிக்கும் வயிறு எமக்கு 
சேமிக்கும் வயிறு 
இன்னோர் எறும்புக்கு 
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு"
****
இனப்பெருமை பற்றி 
சிறு குறிப்பு வரைக .....?

"சிந்து சமவெளிக்கு முற்ப்பட்டது 
எங்கள் பொந்துசமவெளி நாகரீகம்
ராணிக்கென்று அந்தபுறம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை 
இறந்த இரும்பை அடக்கம் செய்ய 
இடிபாடில்லாத இடுகாடு 
மாரிக்கால சேமிப்பு கிடங்கு -
எல்லாம் அமைந்தது எங்கள் ராஜாங்கம்"


எங்கள் வாழ்க்கையின் 
நீளமான நகல் தான் நீங்கள் 
***
உங்களை நீங்கள்  
வியந்து கொள்வதேப்போது ?

"மயிலிறகால் அடித்தாலே 
மாய்ந்து விடும் எங்கள் ஜாதி 
மதயானைக்குள் புகுந்து 
மாய்த்துவிடும்போது"


  நீங்கள் வெறுப்பது...நேசிப்பது ....


வெறுப்பது....

"வாசல்தெளிக்கையில்
வந்துவிழும் கடல்களை"


  நேசிப்பது....

"அரிசிமா கோலமிடும் 
அன்னபூரணிகளை"    


சேமிக்கும் தானியங்களை 
முளைகொண்டால் ஏது  செய்வீர் ?


"கவரும்போதே தானியங்களுக்கு 
கருத்தடை செய்து விடுகிறோம் 
முனைகளைந்த மணிகள் 
முளைப்பதில்லை மனிதா"
****
உங்களால் மறக்க முடியாதது ...?

"உங்கள் அஹிம்சை போராட்ட
ஊர்வலத்தில் 
எங்கள் நான்காயிரம் முன்னோர்கள் 
நசுங்கி செத்தது"
***
எதிர்வரும் எறும்புகளை 
மூக்கோடு மூக்குரசும்  காரணம்?

"எங்கள் காலனி ஏறும்புதானாவென 
மோப்பம் பிடிக்கும் முயற்சியது 
எம்மவர் என்றால் 
வழிவிடுவோம் 
அன்னியர் என்றால் 
தலையிடுவோம்"


சிறிய மூர்த்திகளே -உங்கள் 
பெரிய கீர்த்தி எது?

"அமேஸான் காட்டு ராணுவ எறும்புகள் 
யானை-வழியில் இறந்து கிடந்தால் 
முழு யானை தின்றே முன்னேறும்


மறவாதீர் 
எறும்புகளின் வயிறுகள் 
யானைகளின் கல்லறைகள்"


சாத்வீகம் தானே 
உங்கள் வாழ்க்கை முறை...?

"இல்லை 
எங்களுக்குள்ளும் வழிப்பறி உண்டு 
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு 
அபாயம் அறிவிக்க 
சத்தம் எழுப்பி 
சைகை செய்வதுண்டு "

 எறும்புகளின் சத்தமா 
இதுவரை கேட்டதில்லை ?

" மனிதர்கள் செவிடாயிருந்தால் 
எறும்புகள் என்ன செய்யும்"


நன்றி எறும்பே நன்றி....
 
"நாங்கள் சொல்ல வேண்டும் 
நன்றி உமக்கு"


எதற்கு எதற்கு....


"காணாத காமதேனு பற்றி 
இல்லாத ஆதிசேஷன் பற்றி 
பொய்யில் நனைந்த 
புராணம் வளர்க்கும் நீங்கள் 
இருக்கும் எங்களை பற்றி 
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே   
அதற்க்கு"



2 comments: