வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சந்திப்பு

என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்

நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?

சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி--தேவதேவன்

உதயம்

முன் நடக்கும் பெண்ணணங்கின்
நீலவானக் கொண்டையின் கீழ்
நிலப்பூவே மதுரக்
கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்
என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்
கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக
இவ்வுலகம் எனக்காக----------தேவதேவன்

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.

நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.

தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.---தேவதேவன்

கண்டதும் விண்டதும்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்? --devadevan

ஆற்றோரப் பாறைகளின்மேல்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
'உள்ளொன்றும் புறமொன்றுமி'னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்? -devadevan

நீர் சேகரித்த நத்தைக் கூடுகள்

நீர் சேகரித்த
நத்தைக் கூடுகள்
கானகத்தில் வழி தவறிய
சிறுவனின் தாகம் தணிக்கலாம்
பாதாளச் சிறையிலடைக்கப்பட்ட
இளவரசியை உயிர்த்திருக்க வைக்கலாம்
நண்பகல் வரை கத்திக்கொண்டிருந்த
தவிட்டு வால் குருவியின் தொண்டையை
இதப்படுத்தலாம்.
தேனுண்ணும் வண்ணத்துப் பூச்சியினுக்கோ
கவிதை எழுதும் எனக்கோ
தாகம் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை
ஒருவேளை
மென் சிறு புன்னகையை
எப்போதும் தேக்கி வைத்திருக்கும்
அவளின் ஈர உதடுகளுக்குத்
தெரிந்திருக்கலாம் --ayyanar

ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகள் மொழியாக்கம் : சா.தேவதாஸ்

போகாத பாதை

மஞ்சள் வனமொன்றில் இருபாதைகள் பிரிகின்றன
இரண்டிலும் போகமுடியாதது வருந்த வைக்கிறது
ஒரு பயணியான நான் நீண்டநேரம் நின்று
என்னால் முடிந்தமட்டும் ஒன்றையொன்று உற்று நோக்கினேன்.
ஒன்று புதரில் எங்கே வளைந்து திரும்புகிறதென்று
மற்றொன்று சீரியதாய் இருந்தது இன்னும்
தடங்கள் படியாது புல் நிறைந்ததாயும்
அக்காலையில் இரண்டும் சமமாகக் கிடந்தன.
எந்தக் காலடியும் பதிந்திராத இவைகளில்
முதல் பாதையை இன்னொரு தினத்துக்கு ஒதுக்கினேன்!
ஒருபாதை இன்னொன்றாகக் கிளைத்துச் செல்வதறிந்ததும்
திரும்பி வருவேனா என்று சந்தேகித்தேன்.
இதனை பெருமூச்செறிய கூறிக்கொண்டிருப்பேன்
பல யுகங்கள் கழித்தும்
வனமொன்றில் இருபாதைகள் பிரிந்தன, நான்
இதுவரை போகாத பாதையைத் தெரிவு செய்தேன்.
அதுதான் உண்டாக்கியது எல்லா வித்தியாசங்களையும்.

*********************************

தொலைவாகவும் இயலாது ஆழமாகவும் இயலாது

கடற்கரை ஓரமாய் உள்ளவர்கள்
திரும்பி ஒரே திசையில் நோக்குகின்றனர் எல்லோருமாக.
தம் முதுகைத் திருப்புகின்றனர் நிலத்திற்கு
நாளெல்லாம் நோக்குகின்றனர் கடலினை.
கப்பலொன்று தன் உடற்பாகத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
ஈரத்தரை பிரதிபலிக்கிறது புல்போல
நிற்கும் கடற்காகத்தை.

நிலம் வேறுபடக்கூடும் மேலும்
ஆனால் நிஜம் எதுவாயினும்
நீர் வந்து சேர்கிறது கரைக்கு
மக்கள் பார்க்கின்றனர் கடலினை

அவர்களால் தொலைவாக பார்க்க முடியாது
அவர்களால் ஆழமாகப் பார்க்க முடியாது
ஆனாலும் எப்போதேனும் தடையிருந்தா
அவர்களின் கவனிப்புக்கு.

*********************************

பனிப்பாலைப் பகுதிகள்

பனி வீழ்வும் இரவு கவிழ்தலும் விரைவாக
கடந்த காலத்துள் போய்க்கொண்டிருந்ததாக நான் கண்ட வயலில்
தரை அநேகமாய் பனியால் மூடுண்டது மிருதுவாய்
ஆனாலும் தலைகாட்டும் சில புல்வண்டுகள்
அதனைச் சூழ்ந்திருந்த வனங்கள்
கொண்டிருந்தன அவற்றினுடைவைகளை
விலங்குகளெல்லாம் அடைந்து கிடக்கும் தம் குகைகளில்
எண்ணிப்பார்க்க மறந்தவனாய் இருக்கின்றேன்
நானறியாதபடி என்னை உள்ளடக்கிக் கொள்ளும் தனிமை.

தனித்திருக்கும் அத்தனிமை
தான் தணிவதற்குள் மேலும் தனிமை கொள்லும்
இருளார்ந்த பனியின் வெண்விரிப்பாக
உணர்வு பலமற்று, வெளிக்காட்ட ஏதுமின்றி.

வெற்று வெளிகளில் அவை கலவரப்படுத்த இயலாது என்னை
மானுட இனம் இல்லாத நட்சத்திரங்களுக்கிடையே
என் வீட்டருகே கொண்டிருக்கிறேன் அதனை
இப்பாலைவனப் பகுதிகளாலேயே என்னைக் கலவரப்படுத்த.

*********************************

சூது

பருத்த வெண்சிலந்தி ஒன்றைக் கண்டேன்
வெள்ளை மூலிகைச் செடிமேல் பூச்சியொன்றை கவ்வியபடி
கெட்டியான வெண்பட்டுத் துணிபோல
மரணம் மற்றும் நோயின் பாத்திரங்கள்
ஆயத்தமாயுள்ளன காலை நாடகத்தை ஆரம்பிக்க
சூனியக்காரியின் கஷாயத்தில் சேர்ந்திருப்பவைபோல
ஒரு பனித்துளி சிந்தி, மலர் நீர்க் குமிழியாக
மற்றும் காகிதப் பருந்தென தூக்கிச் செல்லப்படும் உயிரற்ற சிறகுகள்.

வெண்மையாய் இருப்பதற்கும்
பாதையோரத்து நீலத்திற்கும் மற்றும் மாசற்ற மூலிகைக்கும்
அம்மலருக்கும் என்ன சம்பந்தம்?
உச்சியில் சிலந்தியை நிறுத்தி
அப்புறம் இரவில் வெண்பூச்சியை அங்கு செல்ல வைத்தது எது?
திகைப்புறச் செய்யும் இருளின் சூதன்றி வேறென்ன?
எவ்வளவு அற்பமானதெனினும் கட்டுப்படுத்தும் சூது.


இலைகள் உதிரா மரம்

இருக்கத்தான் செய்கின்றது
எல்லோரிடத்தும்
ஓர் கதை
பொதுவில் சொல்லவும்
மறைத்துச்சொல்லவும்
ரகசியமாய் சொல்லவும்
தனக்குள் சொல்லிக்கொள்ளவும்
அதன்
வடிவமும் முடிவும்
மட்டுமே மாறி மாறி
வதைபட்டுக்கொண்டிருக்க
இலைகள் உதிரா
மரக்கிளைகளைக் கொண்ட
உணர்வுகளற்ற
நீர்த்த வெளியில்
துள்ளுவது
எதுவாக இருந்துவிடமுடியும்

--http://nathiyalai.wordpress.com

ஒரு கூழாங்கல்

ஒரு கூழாங்கல்
—————–
ஒரு கூழாங்கல்லை
வாயில் போட்டுக் கொண்டேன்
அது இதுவரை தான் சார்ந்திருந்த
மண்ணின் சுவையை
நாக்கில் தடவுகிறது

மண்
கல்லின் சுவையை
தக்கவைத்துக்கொண்டிருக்குமா என
ஒரு கூழாங்கல் யோசிப்பதேயில்லை

- மனுஷ்ய புத்திரன்

காற்றிற்கு – மனுஷ்ய புத்திரன்

காற்றிற்கு
வாடைக் காற்று
புயல் காற்று
மழைக் காற்று
அனல் காற்று
கடல் காற்று
என்றெல்லாம் பெயர்கள்

எந்தப் பெயரும் இல்லாமல்
எதையும் கடந்து செல்ல முடியாமல்
கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன
நமது உலகில்

அவை உயிரூட்டப் போராடுகின்றன
கண்ணாடி பாட்டில்களில்
அடைக்கப்பட்டிருக்கும்
வண்டுகளுக்கு

- மனுஷ்ய புத்திரன்

கதவு-

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன

சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது

நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்


மணலின் கதை

உதறி விடுவித்துக்கொண்ட
கைகளை நான் முத்தமிடக் குனிகையில்
தொண்டையை அடைத்ததில்லை
அவமானத்தின் எந்தக்கசப்பும்

நிராகரிப்பின்
நெருப்பை எடுத்து
ஏற்றி வைப்பேன்
வீட்டின் நடுவே ஒரு விளக்கை

திரும்பிப் பாராமல்
போனவர்களின் கால் தடம் பற்றி
தொடர்ந்து போவேன்
ஒரு சந்தேகமுமின்றி

வெளியேறச் சொன்னவர்களிடம்
நாளை மீண்டும் சந்திப்போம்
என்பதன்றி வேறொன்றும்
சொல்லத் தோன்றியதில்லை

இன்று வாழ்ந்து கொண்டிருப்பதில்
எவ்வளவு பனி
எவ்வளவு நட்சத்திரங்கள்
எவ்வளவு தனிமை
எவ்வளவு இயலாமைகள்
ஒரு வருத்தமில்லை
ஒரு துளிக்கண்ணீரில்லை

இன்றென்னைக்
கொல்வதெல்லாம்
உன்
கருணையிலிருந்து பிறக்கும்
ஒரு கனிவு

ஒரு
கடமையிலிருந்து
உதிக்கும்
உன் பரிவு

manushya puthiran

நீராலானது

ஓர் அற்புதத்திற்காக
———————
ஓர் அற்புதத்திற்காக காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை
அற்புதங்கள் இனி நிகழாதென்றே
சகுனங்களும் சொல்கின்றன

ஆனால்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்

இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்
ஒரு கணம்

இழந்த காதல்
————–
நின்று சலித்த
என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

கசங்குதல்
———–
இன்று
உன்னுடையதுபோலவே இல்லை
உன் பிரியம்

என்றாலும்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீண்ட நாட்களின்
நீண்ட வெயிலில்
ஓர் உணர்வு
எப்படி கசங்குகிறதென்று

ஒரு மலர் கசங்குவதுபோலவோ
ஒரு துணி கசங்குவதுபோலவோ
ஒரு காகிதம் கசங்குவதுபோலவோ
இல்லை அது

விடுவிப்பிற்குப் பின்
——————–
இத்தோடு
என்னைப்பற்றிய
குற்ற உணர்வுகள் அனைத்திலிருந்தும்
உன்னை விடுவித்துவிட்டேன்

ஆனால்
அது ஏன்
ஒரு வெறுப்பைப்போல
ஒரு பிரிவைப்போல
ஒரு புறக்கணிப்பைப்போல
காட்சியளிக்கிறது?

என்னைப் பற்றிய வருத்தங்கள்
——————————-
நான் உனக்காக
விட்டுச் செல்லும்
சிறந்த பரிசு
என்னைப் பற்றிய
இந்த வருத்தங்கள்

என்னைப் பற்றிய
வருத்தங்கள்
விநோதக் கதைகள் போல
என்னிடம் வருகின்றன
கபடமற்ற ஒரு குழந்தையாக
அவற்றைக் கேட்கிறேன்

என்னைப் பற்றிய வருத்தங்களை
நான் உருவாக்கவில்லை
எனக்கு முன்பாகவே
வெகுகாலமாக
அவை நிலவி வருகின்றன

என்னைப் பற்றிய
உன் வருத்தங்களை
மறுத்து
ஒரு சொல்லும் கூற மாட்டேன்
ஒரு இரகசிய நகக்குறி போல
நம் அந்தரங்கங்களில் அவை வலிக்கட்டும்

என்னைப் பற்றிய
வருத்தங்கள் மட்டும்
இல்லாமல் போனால்
இவ்வளவு காதலை
இவ்வளவு கண்ணீரை
எங்கு போய் மறைப்பாய்


இட்லிப்புத்திரர்கள் – நா. முத்துக்குமார்

இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.

சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.

திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.

மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு

மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.

- நா. முத்துக்குமார் (தொகுப்பு – பட்டாம்பூச்சி விற்பவன்)

இடைவெளி

ஒரு நாற்றுக்கும்
இன்னொரு நாற்றுக்கும்
ஒரு தென்னங்கன்னுக்கும்
இன்னொரு தென்னங்கன்னுக்கும்
விடவேண்டிய இடைவெளிக்குத்
துல்லியமாய் கணக்குண்டு

என்ன யோசித்தும்
புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர வேண்டிய
இடைவெளி எதுவென்று

- மனுஷ்ய புத்திரன் (என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்)