வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மழையும் நீயும்

வாசலில்
மழை
வீட்டினுள்
இருந்தும்
நனைந்தேன்
நீ பேசிகொண்டிருந்தாய்

நீயும்
மௌனமாய்
நானும்
மௌனமாய்
இருவருக்குமாய்
பேசிக்கொண்டிருந்தது
மழை

எனக்கு
மழை பிடிக்கும்
நனைந்தேன்
உனக்கும்
பிடிக்குமென்றாய்
இப்போது
கரைகிறேன்

உன்னை
ரசித்து
கொண்டிருந்தேன்
மழை
பொருமி தீர்க்கிறது
தன்னை
ரசிக்கவில்லை
என

வார்த்தைகள் மட்டுமே



அனிச்சையான
ஒரு கணத்தில்
நிகழ்ந்து
விட்டது இப்பிரிவு
வார்த்தைகள்
உடைந்து
பிளவு பட்டு
நிற்கிறோம்
யவனம்
மிகுந்த என்
பிரியங்களை
சொற்களின்
பாத்திரத்தில் நிரப்பி
உனக்கென
உனது கரங்களில்
ஏந்திகொள்வாய் என
எண்ணினேன்
நீயோ
என்னையும்
சேர்த்தே நொறுக்கி
வீசி சிரிக்கிறாய்
ஆயிரம்
துகள்களாய் வீழ்ந்தும்
அத்தனை
சிதரல்களிலும்
உன் மீதான
காதல் பரவி
மேலும் காதலிக்கிறேன்
என்றேனும்
என்னை
நினைவு கூர்கையில்
எனது வார்த்தைகள்
என்னை நினைவு
கூறும்
அப்போது
வார்த்தைகளை
ஏந்தி அழாதே
அவை எப்போதும்
வார்த்தைகள்
மட்டுமே

தோளில் விழும் மழை

ஜன்னலின்
துவாரங்களினுடே
வழிந்து
கொண்டிருக்கிறது
சூரிய வெளிச்சம்

இந்த
அறையில்
நானும் இருளும்
மட்டுமல்ல
தனிமையும்
துயரும்
கூட

இந்த
அறையினின்றும்
உனது
நினைவினின்றும்
வெளியேற வேண்டும்

வானமோ
அடுத்த
மழைக்கு
ஏற்பாடுகளை
செய்து கொண்டிருக்கிறது
எல்லா
வெளியும்
உனது நீட்சியென
விரிகிறது
போக்கிடம்
இன்றி
தவிக்கையில்
தோளை தட்டி
பெய்கிறது
மழை
இன்னும் வாழ்க்கை
இருக்கிறெதென

பிரிவு


எதிர்பாரா
மரணமென
நிகழ்கிறது
உனது பிரிவு
இரண்டுதுளி
கண்ணீருக்கும்
கூட
இடமின்றி

வாழ்த்துக்கள்

17 -09 -2010 அன்று பிறந்த நாள் காணும் நண்பர் தஞ்சை ஸ்ரீனிவாசனுக்கும் திருமதி ஆதிரா@பானுமதி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் பானுமதி அவர்கள் 6000 ௦௦௦பதிவுகல் கடந்து மிக சிறப்பாக ஈகரை வழி நடுத்துவதர்க்காக மட்டுமின்றி எனக்கு பிடித்த சில நல்ல மனிதர்களில் இவர்கள் இருவரும் உண்டு அதற்க்கு இந்த தருணம் சரியாய் இருந்தது இதை ஈகரையில் வாழ்த்த வேண்டும் ஆனாலும் எனது இந்த வலைப்பூவிலேயே வாழ்த்தலாம் என இந்த பதிவை இடுகிறேன் இவர்கள் இருவரையும் வாழ்த்தும் அளவு நான் பெரியவனில்லை ஆனாலும் இருவருக்கும் ஒரு கவிதை இட வேண்டும் என ஒரு ஆசை ஆனால் ஓகோவென்று முகஸ்துதி செய்வது போல் இருந்து இதற்க்கு இந்த பயல் சும்மாவே இருந்திருக்கலாம் என தோன்றிவிடகூடாதே என்ற அச்சமும் இருக்கிறது ஆனால் கவிதை இட வேண்டும் என்ற ஆசையும் விடவில்லை இறை அருளால் சென்ற வருட ஒரு இலக்கிய இதழை புரட்டி கொண்டிருந்த போது எனக்கு மிக பிடித்த தேவதேவன் கவிதை ஒன்றை வசிக்க நேர்ந்தது அதையே இவர்களுக்கு வாழ்த்து இடுகிறேன்

கேண்மை
வின் தழுவி அளாவும்
இந்த மஞ்சுகளை நெருங்கித்
தீண்டுமின்பம் காண்பதற்கோ
நெடிதோங்கின இந்த மலைகள் ?

தீண்டி சிலிர்த்து
செழித்து உருகி
தீராது அருவி நிற்கின்றன

மஞ்சு தவழும்
இந்த மலைகளின் சகவாசத்தாலோ
நெடிதோங்கி வளர்ந்து நிற்கின்றன
இந்த மரங்களும்

மலைகளும் பெரிதுஉவக்கும்
இந்த மரங்களின் சகவாசத்தால்தனோ
வற்றாத
நீரும் ஆங்கு தவழும் காற்றும்
நிழலும் பூவும் கனிகளும் தேனும்
பல்லுயிர்களின் கூட்டுறவு வாழ்வும் போல்
இனிக்கின்றனர் சில மனிதர்கள்

இந்த இனிக்கும் மனிதர்களுக்கு எனது வாழ்த்துகள்

என்னை நான்


எல்லோரையும்
கடந்து
போகிறேன்
சமயங்களில்
என்னையும்
செல்கின்ற
இடங்களில்
விட்டு விட்டு
திரும்புகிறேன்
என்னை
மீண்டும்
தேடி
கிடைப்பதற்குள்
தொலைத்து
விடுகிறேன்
போகும் இடங்களில்
மீண்டும்
என்னை
தொலைப்பதற்கும்
தேடுவதற்குமே
சரியாய்
இருக்கிறது
வாழ்க்கை
பின் எங்கே
வாழ்வது


வாழ்க்கையா வார்த்தையா

உனது
விவாஹம்
குறித்த
விவாதம்
எழுகையில்
தொண்டையில்
அடைப்பது
வாழ்க்கையா
வார்த்தையா


பின் தொடர்கிறது

எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது

உனக்கென விட்டு செல்கிறேன் பிரியங்களையும் கண்ணீரையும்

எல்லாம்
முடிந்துவிட்டது
பாதங்களின் கீழ்
நழுவிக்
கொண்டிருக்கிறது
பிரபஞ்சம்
சொல்வதற்கும்
ஏதுமில்லை
செல்ல வேண்டியதுதான்
இருந்தும்
ஏதோ ஒன்று
உனக்கான
ஒன்று
நெஞ்சில் இறங்குகிறது
பெரும் பாரமாய்
யாதென்று அறிவதில்லை
இருப்பினும்
உனக்கென விட்டு
செல்கிறேன்
பிரியங்களையும்
கண்ணீரையும்

பெண் பிள்ளைகள்

பெண் பிள்ளைகள்

பிறக்கும்போதே

பழகவேண்டும்

அவர்கள் அற்ற

நாட்களை

எவ்வாறு

தனித்து இருப்பது

என்று

ஏனெனில்

அவர்கள்

வளர்ந்த பிறகு

பிடுங்கி மாற்றப்படும்

மரம் போன்றவர்கள்

ஆணி வேர்

பதிந்த மரம்

வெற்றிடம் செல்ல

வளர வெகு

கடினம்

ஆனால்

மரம் இருந்த

பூமி பள்ளம்

காலம்

முழுதும்

தங்கி நிற்கும்

அக்காயத்தை

வண்ணத்து பூச்சி ஏன் உயர பறக்க கூடாது

வண்ணத்து பூச்சி

ஏன் உயர

பறக்க கூடாது

தன் சிறகின்

வண்ணங்களை

வனமெங்கும்

நிரப்பியபடி

நீலமும்

சிவப்பும்

கொண்ட மேகங்கள்

வண்ணமாய் மலரட்டும்

மரங்களின் கிளைகளில்

பூக்களென மாறட்டும்

நிதமும் வானம்

காணட்டும்

அதன் சிறகுகளில்

வானவில்

தனியே பறக்கும் தும்பி

தட்டான்பூச்சிகள்


விளையாட


குழந்தைகள்


இன்றி


அமர்ந்தே இருக்கிறது


அதன்


கண்ணாடி சிறகுகள்


பிஞ்சு விரல்களை


எண்ணி வீரல்


கொண்டது


இப்போதெல்லாம்


குழந்தைகள்


நிஜத்தை விட்டு


நிழலில்


வாழ பழகி


கொண்டனர் போல


ரசித்த கவிதை

ஞானம்



சித்தார்த்தனைப் போல்

மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு

நடுராத்திரியில்

வீட்டைவிட்டு

ஓடிப்போக முடியாது என்னால்



முதல் காரணம்

மனவியும்,குழந்தையும்

என்மேல்தான்

கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்

அவர்கள் பிடியிலிருந்து

தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல



அப்படியே தப்பித்தாலும்

எங்கள் தெரு நாய்கள் எமன்கள்

லேசில் விடாது

என்னைப் போன்ற

அப்பாவியைப் பார்த்து

என்னமாய் குரைக்கிறதுகள்



மூன்றாவது

ஆனால்

மிக முக்கியமான காரணம்

ராத்திரியே கிளம்பிவிட்டால்

காலையில்

டாய்லெட் எங்கே போவது

என்பதுதான்.

-தபசி.

நானே அவனை மன்னித்து விடலாம்

சாலை
நிறைந்த
சேற்றினை மேல்
எரிந்து கடக்கிறது
ஒரு வாகனம்

வெகுண்டு
எழ நினைத்தேன்
அதனால் ஏதும்
நிகழாது

அவ்வாறு
நிகழ்வதால்
அவன் வாகன
கண்ணாடியை நொறுக்கலாம்
நீண்ட மணித்தியால
விவாததிற்கு பின்
ஒரு மன்னிப்பை
கோரலாம்
அதுவும்
நாய்க்கு வீசும்
ரொட்டி துண்டென
வீசுவான்
அதற்க்கு
நானே அவனை
மன்னித்து விடலாம்
என் இயலாமைக்கு
இதை விட
சிறந்த பெயர்
ஏதும் இருக்க இயலாது