வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மழை பெய்து-தேவதேவன்


அப்போதுதான் முடிந்திருந்தது

அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு

பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை

நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்

அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல

வானளாவிய சூனிய வெளியெங்கும்

என் பார்வையை இழுத்தபடியே

பறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது

அதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்

ஒரு செத்த எலி

வண்ணத்துப்பூச்சி-தேவதேவன்
















அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று

வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்

இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்

அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டதா இம்மண்ணில் ?

மண்ணின் வளமும் பெருமையும் மின்ன

மேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்

எத்தனை வண்ணங்களில் !

ஆனால்

தேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்

சிறகுகள் பரபரக்க

அங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது

என்னை அறுத்தது அழகா அருவருப்பா

எனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி

உறிஞ்சும் வேகத்தில்

கைகூப்பி இறைஞ்சுவதுபோல

மேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான

உடல் முழுக்க விர்ரென்று

நிரம்பிக் கொண்டிருந்தது தேன்

சிறகுகளின் மெலிதானதுடிப்பில்

ஆழமானதோர் நடுக்கம்

எந்தமொரு வைராக்கியத்தை

மூச்சை பிடித்துகாக்கிறது அது ?

அதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்

கீழ்நோக்கி சுருண்டு உன்னியது

கரு தாங்கும் அதன் கீழ்பகுதி

தேன் நிரம்பி கனத்து

பூமி நோக்கி தள்ளும்

சின்னஞ்சிறு பாரத்தை

வெகு எளிதாக

தேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன

மரணமற்ற ஆனந்த பெருவெளியில்!

நிசி-தேவதேவன்


இரை பொறுக்கவும்

முட்டை இடவும் மாத்திரமே

பூமிக்கு வந்தமரும்

வானவெளிப்பறவை ஒன்று

இட்ட ஒரு பகல் முட்டையின்

உட்கரு நிசியுள்

பகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்

உறங்காது துடிக்கும் நான்

என் அவஸ்தைகள்

கர்வுவில் நடைபெறும் வளர்ச்சியா

பரிணாம கதியில்மனிதனை புதுக்கி

ஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா

பகலின் நினைவுகள் கொட்டி கொட்டி

இரவெல்லாம் தெறிக்கும்

என் சிந்தனைகள் வேதனைகள்

ஏன் இவ்வேதனை ?

எதற்கு இச்சிந்தனைகள் ?

நானே அறியாது

என்னில் கலக்கும் ஜீன்கள்

கருவே அறியாது

கருவில் கலக்கும் தாதுக்கள் எவை ?

இனி நான் எவ்வாறாய் பிறப்பேன்

என் கனவில் எழுந்த அந்த மனிதனாய்

நான் என்று பிறப்பேன் ?

அல்ல மீண்டும் மீண்டும்

முட்டை இடவும் இரை ப்றுக்கவும்

இரைக்காய் சக ஜீவிகளுடன்

போராடவும் மாத்திரமே

பூமிக்கு வந்தமரும்

அதே வானவெளிபறவையாக

சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...-தேவதேவன்


ஒரு பறவை நீந்துகிறது

சொற்களை வாரி இறைத்தபடி

சொற்களை வாரி இறைப்பதனாலேயே

அது நீந்துகிறது

காற்றின் துணையும் உண்டு

நீ இக்கவிதையை வாசிக்கையில்

அமைதியான ஏரியில்

துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்

படகுப்பயணம் போல

கேட்கிறதா உனக்கு

அப்பறவையிந் சிறகசைவு தவிர

வேறு ஒலிகளற்ற பேரமைதி ?

சொற்பெருவெளியில்

சொல்லின் சொல்லாய் அப்பறவை

தன் பொருளை தேடுவதாய்

சொற்களை விலக்கி விலக்கி

முடிவற்று முன் செல்கிறது

அப்போது

உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?

பரவசமா ?

ஏகாந்தமா ?

குற்றவுணர்ச்சியின் கூசலா ?

தனிமையா ?

தாங்கொணாத துக்கமா ?

இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை

உன்னில் உண்டாக்கி விடலாம்

ஆனால் எந்தபொறுப்பையும்

அறிந்திரராதது அது .


சிறகுகள்-தேவதேவன்


வானம் விழுந்து நீர்

சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை

நீரில் எழுந்தது வானம்

சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு

சிறகினுள் எரியும் சூரியத்தகிப்பே

சிறகடிப்பின் ரகசியம் ஆகவேதான்

சுய ஒளியற்ற வெறும் பொருளை

சிறகுகள் விரும்புவதில்லை

பூமி போன்ற கிரகங்களை

அது நோக்குவதேயில்லை

[சிறகடிக்கையில்

வெட்கி ஒடுங்கிக் கொள்கின்றன

பறவையின் கூர்நகக் கால்கள்]

சூர்யனுக்குள் புகுந்து வெறுமே

சுற்றிசுற்றி வருகின்றன சிறகுகள்

சிறகின் இயல்பெல்லைக்குள்

நிற்குமிடமென ஏதுமில்லை

வெளியில் அலையும் சிறகுகளுக்கு

இரவுபகல் ஏதுமில்லை


அமைதி எனபது -தேவதேவன்


பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்


அமைதி என்பது மரணத் தறுவாயோ ?


வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?


வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.


அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?


எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?

எஞ்சோட்டுபெண் -தமிழச்சி தங்கபாண்டியன்

‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

கனாக் கண்டேன் தோழா-வைரமுத்து

கனவெனப் படுவது
மனதின் நீட்சி

அது
ஆழியளக்கும் நாழி
பொய்யில் பூத்த நிஜம்
அன்றி
நிஜத்தில் மலரும் பொய்

* * * * *
என் கனவுகள்
வினோதமானவை

கோளங்களற்ற பெருவெளியில்
உட்கார இடம்தேடுமொரு
பட்டாம்பூச்சியும்

வீழ ஒரு தளமின்றிப்
பயணித்துக் கொண்டேயிருக்கும்
அனாதை மழைத்துளியும்

வாரம் ஒருமுறை வந்துபோகும்
என் கனவில்

* * * * *
ஆயிரம்மைல் நீளத்தில்
உலகராணுவ ஊர்வலம்

அது
அலையற்ற ஒரு கடலில் முடிகிறது

ஒவ்வொரு வீரனும்
கைக்கொண்ட ஆயுதம்
கடலில் எறிகிறான்

எறிந்த ஆயுதம்
விழுந்த இடத்தில்
ஆளுக்கொரு கலப்பை
ஆளுக்கொரு ரோஜாப்பூ
மிதந்து மிதந்து மேலேறி வருகிறது

ஒருமுறை கண்டும்
மறவாத கனவிது

* * * * *
மேகத்தில் ரத்தம்
பூக்களில் மாமிசம்
கத்தியில் கண்ணீர்
வழிந்தன கனவில்

கண்கசக்கி விழிக்குமுன்
ஜாதிக்கலவரம்

* * * * *

கொம்பு முளைத்த
புலியன்று துரத்தும்

ஆற்றில் விழுந்து
சேற்றில் புதைவேன்

கிட்ட இருக்கும் மரத்தின் வேர்
என்ன முயன்றும் எட்டவே எட்டாது

எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி...

பரீட்சை மாதம் அதுவென்பதை
எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?

* * * * *

போக்குவரத்துக்கிடமின்றிச்
சாலைகள் எல்லாம்
தானிய மூட்டைகள்

மூட்டைகளுக்கடியில்
நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்

பொருளாதாரமும்
புரியும் என் கனவுக்கு

* * * * *


மனதின் நீட்சி

அது
ஆழியளக்கும் நாழி
பொய்யில் பூத்த நிஜம்
அன்றி
நிஜத்தில் மலரும் பொய்

* * * * *
என் கனவுகள்
வினோதமானவை

கோளங்களற்ற பெருவெளியில்
உட்கார இடம்தேடுமொரு
பட்டாம்பூச்சியும்

வீழ ஒரு தளமின்றிப்
பயணித்துக் கொண்டேயிருக்கும்
அனாதை மழைத்துளியும்

வாரம் ஒருமுறை வந்துபோகும்
என் கனவில்

* * * * *
ஆயிரம்மைல் நீளத்தில்
உலகராணுவ ஊர்வலம்

அது
அலையற்ற ஒரு கடலில் முடிகிறது

ஒவ்வொரு வீரனும்
கைக்கொண்ட ஆயுதம்
கடலில் எறிகிறான்

எறிந்த ஆயுதம்
விழுந்த இடத்தில்
ஆளுக்கொரு கலப்பை
ஆளுக்கொரு ரோஜாப்பூ
மிதந்து மிதந்து மேலேறி வருகிறது

ஒருமுறை கண்டும்
மறவாத கனவிது

* * * * *
மேகத்தில் ரத்தம்
பூக்களில் மாமிசம்
கத்தியில் கண்ணீர்
வழிந்தன கனவில்

கண்கசக்கி விழிக்குமுன்
ஜாதிக்கலவரம்

* * * * *

கொம்பு முளைத்த
புலியன்று துரத்தும்

ஆற்றில் விழுந்து
சேற்றில் புதைவேன்

கிட்ட இருக்கும் மரத்தின் வேர்
என்ன முயன்றும் எட்டவே எட்டாது

எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி...

பரீட்சை மாதம் அதுவென்பதை
எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?

* * * * *

போக்குவரத்துக்கிடமின்றிச்
சாலைகள் எல்லாம்
தானிய மூட்டைகள்

மூட்டைகளுக்கடியில்
நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்

பொருளாதாரமும்
புரியும் என் கனவுக்கு

* * * * *

மேலே
மேலே
மேலே
மேலே
பறக்கிறேன்

எங்கிருந்தோ ஓர் அம்புவந்து
இறக்கை உடைத்து இரைப்பை கிழிக்கக்
கீழே
கீழே
கீழே
கீழே
விழுகிறேன்

ஒரு கையில் வாளும்
ஒரு கையில் வீணையும் கொண்ட
பெண்ணொருத்தி
என்னைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறாள்

அடிக்கடி தோன்றும்
அதிகாலைக் கனவிது
அவள்
முகம்பார்க்குமுன் முடிந்துபோகிறது

* * * * *
வெயிலஞ்சும் பாலைவனம்
வெறுங்காலொடொரு சிறுமி
அவளுக்கு மட்டும்
குடைபிடிக்கும் ஒரு மேகம்

அவள் நடந்தால் நகரும்
நின்றால் நிற்கும்

இன்றவள்
எங்குற்றாளோ?
என்னவானாளோ?
இன்று
இருந்தால் அவளுக்கு
இருபத்தொரு வயதிருக்கும்

* * * * *
ஷேக்ஸ்பியர் வீடு...

பிரம்பு வாத்தியார்...

பிரபாகரன் தொப்பி...

கம்பங்கொல்லைக் குருவி...

கலைஞர் கண்ணாடி...

ராத்திரிவானவில்...

அராபத்தின் குழந்தை...

டயானாவின் முழங்கால்...

கொடைக்கானல் மேகம்...

வீட்டில் வெட்டிய ஆட்டின் தலை...

இப்படி...
அறுந்தறுந்துவரும் கனவுகள் ஆயிரம்

* * * * *
கடந்த சில காலமாய்
இப்படியோர் கனவு

இமயமலை - பனிப்பாளம்
தலை இல்லாத ஒற்றை மனிதன்
ஏந்தி நடக்கிறான் தேசியக்கொடியை

அடிவாரத்தில்
கோடி ஜனங்கள் கைதட்டுகிறார்கள்
நிர்வாணம் மறைத்த கையை எடுத்து

என்ன கனவிது?

வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?

* * * * *

மெழுகுவர்த்தி-வைரமுத்து

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு
சிதைவதை
எண்ணியே
அந்தத் தாய்
அழுகிறாள்

மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ
நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது

மரணத்தை
வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே

விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு
நீர்ப்பயிர் வளர்க்கிறது

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?

எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?

கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?

எப்பொழுதுமே இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?

இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள்
முட்டி மூழ்கும்

அங்கே வடிவது
கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?

ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகு தான்
உயிர் வருகிறது

மனிதனைப் போலவே
இந்த
அஃறிணையும் நான்
அதிகம் நேசிப்பேன்

எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்

என் இரத்த நெய்யில்
இது
நம்பிக்கைச் சுடரேற்றும்

வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்

அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.

இலை- வைரமுத்து

நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது

சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது

இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி

என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு

அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும் -
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்.

ஒருநாள்
ஒண்டவந்த ஒரு பறவை
கிண்டியது என்னை

"மலராய் ஜனிக்காமல்
கனியாய்ப் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!"

காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்

"நல்லவேளை
நான் மலரில்லை

தேனீக்கள் என்கற்பைத்
திருடுகின்ற தொல்லையில்லை

நல்ல வேளை
நான் கனியில்லை

கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்"

அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்

இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்

வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே

விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே

நன்றி மரணமே
நன்றி

வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு

பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய்மண்ணை
முதன்முதல் முதன்முதல்
முத்தமிடப் போகிறேன்

வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்

தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்

ஆகா
சுகம்
அத்வைதம்

வருந்தாதே விருட்சமே

இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்

வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்

கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்

எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்

நட்புக்காலம் -அறிவுமதி

என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும் படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்.

தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும்
தெரிவதில்லை
அது
ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று

அணுத்திமிர் அடக்கு -அறிவுமதி

கொடிமரம்
ஒடி

சிறைகள்
இடி

இராணுவம்
அழி

அரசுகள்
அற்ற
அரசினைச்
செய்
'
கனவைச்
சுருட்டு

புனிதம்
விரட்டு

தீது
செயற்கை

காத்திருக்காதே

கற்பு
உடலுக்கு

காதல்
உயிருக்கு

காதலி

கோடுகளும் சித்திரங்களே-வைரமுத்து


என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.

என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்

ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்

என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று

என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்

இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது

தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி

இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது

இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை

சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்

இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்

இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்

நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!

மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.

மழைக்காலப் பூக்கள்-வைரமுத்து


அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்

ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.