வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நகர்ந்து கொண்டிருக்கிறது


நகர்ந்து
கொண்டிருக்கிறது நதி
மேற்பரப்பில்
மிதக்கும் மேகங்களை
சுமந்து
யுகாந்திர
படிமங்கள்
நிறைந்த வெளியில்
நழுவிய
காலத்தின்
கணங்களை
கையிலேந்தி
நகர்ந்து கொண்டே இருக்கிறது
நதி
வேரினை தழுவி
விடை பெரும்
நதிக்கு
விருட்சம்
தரமுடிந்ததேல்லாம்
உதிர் இலைகள் மட்டுமே

மொழிபெயர்ப்பு கவிதைகள் -அப்துல் கையூம்

பாட்டுக்கோர் புலவன் பாரதியே !

பைந்தமிழ்ச் சாரதியே !

பகிரங்கமாய் உனக்கோர் கடிதம் .. ..

பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்க்க வேண்டும் என்றாய். உன் வாக்கை படு சீரியஸாக எடுத்துக் கொண்டு நானும் சில பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.


திருமணம்


திருமணம் புரி !


அடக்கமான மனைவி

அதிசயமாய்

அமைந்து விடில்

அகமகிழ்ந்து சிரி !


கணக்கு உனது

கணிசமாய் மாறிப்போனால்

கவலையே படாமல்

காவி தரி !


வங்கி

குடை

கடன் கொடுப்பார்;

வானிலை

தெளிவாய் இருக்கையில்.


‘படக்’கென

பிடுங்கிக் கொள்வார்;

அடைமழை

விடாது பெய்கையில்.

- By Robert Frost



வேடிக்கை

ஆக அனைத்தும்

நகைப்பூட்டும் ..

பிறருக்கு அது

நடக்கையில்

மட்டும் !

- By Will Rogers (1879 – 1935)



ஹோனோலூலூ

விடுமுறை கழிக்க

படுஜாலி பிரதேசம்.


எல்லாமே கிடைக்கும்..


மழலைகள் களிக்க

மணற்வெளி;


மனைவி காய

வெயில் குளியல்;


ஆங் . மறந்து விட்டேனே ..

மாமியார்களுக்கென

பிரத்யேகமாக

கடல்நீரில்

சுறாமீன்கள் !!

- By Ken Dodd



சுற்றுச் சூழல்

பின்தங்கிய நாட்டில்

நீர் குடிக்க யோசி !


முன்னேறிய நாட்டில்

சுவாசிக்க யோசி.


அவை யாவும் தூசி !

Jonathan Raban



பயம்

ஆட்டுக்கு

அருகில் செல்ல

எனக்கு பயம் !


கழுதைக்குப் பின்னால்

கடந்துப் போக பயம் !


முட்டாளிடம் நெருங்க

முழுவதும் பயம்

அவனது

நாலாபுரத்திலும் !!

- By Edgar Watson Howe



பிரம்மச்சாரிகள்

பிரம்மச்சாரிகளுக்கு

கணிசமான வரியினை

கடுமையாக விதியுங்கள்.


பல மனிதர்கள்

வதைக்கப்பட ..


சில மனிதர்கள் மாத்திரம்

மகிழ்சியில் திளைக்க ..


இது என்ன

பாரபட்சம் ..?

(திரு. வாஜ்பாய் அவர்களும். திரு. அப்துல் கலாம் அவர்களும் என்னை மன்னிப்பார்களாக)

By Oscar Wilde


பிரபலங்கள்

பிரபலமாய் இருப்பதில்

பெரியதொரு வசதி.


அவர்கள்

போரடித்தாலும் கூட

ரசிக்கத் தெரியாதது

இவர்களது குற்றமென

எண்ணிக் கொள்கிறார்கள்

அப்பாவி மனிதர்கள் !!

By Henry Kissinger


நன்றி திண்ணை

உறக்கம் கலைந்த இரவு


எவருமற்ற
வீதியெங்கும்
வெளிச்ச எச்சில்
துப்பி நிற்கிறது
தெருவிளக்கு
காற்றின்
கதைப்பில்
அசைந்து
சிரிக்கிறது
வரிசையாய் மரங்கள்
தாமதமாய்
வீடு

திரும்புவனின்
வாகனசப்தம்
நிசப்தத்தின்
திரைகளை
கிழித்து எரிகிறது
திசைகள்
அற்ற இருள்
வெளியில் கடந்து
கொண்டிருக்கிறது
இந்த நாளின் இறுதி
பொழுது
உறக்கம்
கலைந்த நடு நிசிகளை
நிரப்புகிறான்
வார்த்தைகளை
கொண்டு




சொற்களின் குருதி











சொற்களின்
கூர் முனைகளில்
வழிகிறது
என் மௌன குருதி
உனது
மௌன கதவுகளை
திறக்க முயற்சித்து
திரும்புகிறது
சொற்கள்
உனது
புறக்கணிப்பின்
முன் எப்பொழும்
நிராயுதபாணியாக
நான்
வீழ்த்தபட்டும்
உனக்கென
சேகரித்துள்ளேன்
ஒளி ஊடுருவும்
மகத்தான
கண்ணீரை