வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகள் மொழியாக்கம் : சா.தேவதாஸ்

போகாத பாதை

மஞ்சள் வனமொன்றில் இருபாதைகள் பிரிகின்றன
இரண்டிலும் போகமுடியாதது வருந்த வைக்கிறது
ஒரு பயணியான நான் நீண்டநேரம் நின்று
என்னால் முடிந்தமட்டும் ஒன்றையொன்று உற்று நோக்கினேன்.
ஒன்று புதரில் எங்கே வளைந்து திரும்புகிறதென்று
மற்றொன்று சீரியதாய் இருந்தது இன்னும்
தடங்கள் படியாது புல் நிறைந்ததாயும்
அக்காலையில் இரண்டும் சமமாகக் கிடந்தன.
எந்தக் காலடியும் பதிந்திராத இவைகளில்
முதல் பாதையை இன்னொரு தினத்துக்கு ஒதுக்கினேன்!
ஒருபாதை இன்னொன்றாகக் கிளைத்துச் செல்வதறிந்ததும்
திரும்பி வருவேனா என்று சந்தேகித்தேன்.
இதனை பெருமூச்செறிய கூறிக்கொண்டிருப்பேன்
பல யுகங்கள் கழித்தும்
வனமொன்றில் இருபாதைகள் பிரிந்தன, நான்
இதுவரை போகாத பாதையைத் தெரிவு செய்தேன்.
அதுதான் உண்டாக்கியது எல்லா வித்தியாசங்களையும்.

*********************************

தொலைவாகவும் இயலாது ஆழமாகவும் இயலாது

கடற்கரை ஓரமாய் உள்ளவர்கள்
திரும்பி ஒரே திசையில் நோக்குகின்றனர் எல்லோருமாக.
தம் முதுகைத் திருப்புகின்றனர் நிலத்திற்கு
நாளெல்லாம் நோக்குகின்றனர் கடலினை.
கப்பலொன்று தன் உடற்பாகத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
ஈரத்தரை பிரதிபலிக்கிறது புல்போல
நிற்கும் கடற்காகத்தை.

நிலம் வேறுபடக்கூடும் மேலும்
ஆனால் நிஜம் எதுவாயினும்
நீர் வந்து சேர்கிறது கரைக்கு
மக்கள் பார்க்கின்றனர் கடலினை

அவர்களால் தொலைவாக பார்க்க முடியாது
அவர்களால் ஆழமாகப் பார்க்க முடியாது
ஆனாலும் எப்போதேனும் தடையிருந்தா
அவர்களின் கவனிப்புக்கு.

*********************************

பனிப்பாலைப் பகுதிகள்

பனி வீழ்வும் இரவு கவிழ்தலும் விரைவாக
கடந்த காலத்துள் போய்க்கொண்டிருந்ததாக நான் கண்ட வயலில்
தரை அநேகமாய் பனியால் மூடுண்டது மிருதுவாய்
ஆனாலும் தலைகாட்டும் சில புல்வண்டுகள்
அதனைச் சூழ்ந்திருந்த வனங்கள்
கொண்டிருந்தன அவற்றினுடைவைகளை
விலங்குகளெல்லாம் அடைந்து கிடக்கும் தம் குகைகளில்
எண்ணிப்பார்க்க மறந்தவனாய் இருக்கின்றேன்
நானறியாதபடி என்னை உள்ளடக்கிக் கொள்ளும் தனிமை.

தனித்திருக்கும் அத்தனிமை
தான் தணிவதற்குள் மேலும் தனிமை கொள்லும்
இருளார்ந்த பனியின் வெண்விரிப்பாக
உணர்வு பலமற்று, வெளிக்காட்ட ஏதுமின்றி.

வெற்று வெளிகளில் அவை கலவரப்படுத்த இயலாது என்னை
மானுட இனம் இல்லாத நட்சத்திரங்களுக்கிடையே
என் வீட்டருகே கொண்டிருக்கிறேன் அதனை
இப்பாலைவனப் பகுதிகளாலேயே என்னைக் கலவரப்படுத்த.

*********************************

சூது

பருத்த வெண்சிலந்தி ஒன்றைக் கண்டேன்
வெள்ளை மூலிகைச் செடிமேல் பூச்சியொன்றை கவ்வியபடி
கெட்டியான வெண்பட்டுத் துணிபோல
மரணம் மற்றும் நோயின் பாத்திரங்கள்
ஆயத்தமாயுள்ளன காலை நாடகத்தை ஆரம்பிக்க
சூனியக்காரியின் கஷாயத்தில் சேர்ந்திருப்பவைபோல
ஒரு பனித்துளி சிந்தி, மலர் நீர்க் குமிழியாக
மற்றும் காகிதப் பருந்தென தூக்கிச் செல்லப்படும் உயிரற்ற சிறகுகள்.

வெண்மையாய் இருப்பதற்கும்
பாதையோரத்து நீலத்திற்கும் மற்றும் மாசற்ற மூலிகைக்கும்
அம்மலருக்கும் என்ன சம்பந்தம்?
உச்சியில் சிலந்தியை நிறுத்தி
அப்புறம் இரவில் வெண்பூச்சியை அங்கு செல்ல வைத்தது எது?
திகைப்புறச் செய்யும் இருளின் சூதன்றி வேறென்ன?
எவ்வளவு அற்பமானதெனினும் கட்டுப்படுத்தும் சூது.


No comments:

Post a Comment