வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நகுலன் கவிதைகள்

அலைகளைச் சொல்லி...
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை.
***************************
வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.

***********************************
தன்மிதப்பு
யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது – அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் – இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்
**********************************
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
*******************************
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.
******************************
எனக்கு யாருமில்லை
நான்
கூட...
இவ்வளவு பெரிய
வீட்டில்
எனக்கு இடமில்லை
இவ்வளவு
பெரிய நகரத்தில்
அறிந்த முகம் ஏதுமில்லை
அறிந்த முகம் கூட
மேற் பூச்சுக் கலைய
அந்நியமாக
உருக்காட்டி
மறைகிறது
என்னுருவங்
கலைய
எவ்வளவு
காலம்
கடந்து செல்ல வேண்டும்
என்ற நினைவுவர
''சற்றே நகர்''
என்று ஒரு குரல் கூறும்.
********************************

அங்கு

"இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்று
கேட்டார்
"எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

*********************************

நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’’

************************************

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
******************************
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

***************************8

என்னைப்
பார்க்கவந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

*********************************

நீயிருக்கநானிருக்க
நேற்று இன்று நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

************************8
உன்னையன்றி
உனக்கு
வேறுயாருண்டு?

**************************88
ஆர்ப்பரிக்கும்
கடல்அதன் அடித்தளம்
மௌனம்
மகா மௌனம்!

**********************
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை
ஞானம்!

************************

எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும் நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்
ன!
** ** ** ** ** ** ** **





No comments:

Post a Comment