வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மழைக்காலப் பூக்கள்-வைரமுத்து


அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்

ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.

No comments:

Post a Comment