வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

இசை -வைரமுத்து

துளைகள் கொண்டது மனிதமனது
எறும்பின் கண்ணினும் நுண்ணிய துளைகள்
விழியினும் சவ்வினும் மெல்லிய துளைகள்
ஆயிரம் லட்சம் கோடித் துளைகள்

பல துளைகள்
பிறந்தது முதலாய்ப் பூட்டிக் கிடப்பவை
இறக்கும் வரைக்கும் திறக்காதவை

அத்தனை துளைகளும்
திறத்தல் அரிது

அத்தனை கோடித் துளைகளையும்
ஒரே கணத்தில் திறந்துவைக்கும்
விசை எங்கு கண்டாய்
இசையே!



காற்றை நுரைக்க வைக்கிறாய்
காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய்
வெறுமை நிரப்புகிறாய்
மாயைக்குள் மெய்யாகிறாய்

கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய்
மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
தாவரங்களின் தலை கோதுகிறாய்
மேகங்கள் பீச்சுகிறாய்

மூங்கிலில் வண்டு செய்த
புண்ணில் பண்ணிசைக்கிறாய்
பிறையை வளர்ப்பிக்கிறாய்
விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்

எங்கள்
மனப்பாறை இடுக்குகளில்
தேன்கூடு கட்டுகிறாய்

உன் வருகைக்கு எங்கள்
கண்ணிமைகள் தாழ்ந்து
கம்பளம் விரிக்க

கண்ணீர் ஆங்காங்கே
திரவமலர் தெளிக்க

புல்லரிக்கும் உரோமங்கள்
எழுந்து நின்று வரவேற்க

உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே!


நாவுக்குச் சிக்காத அமிர்தம்
நீ நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ

நீயே சொல் இசையே
செவியே போதுமா?
நான்கு புலன் உபரியா?

மரக்கிளை அசைவில் மணிகளின் ஒலியில்
பறவையர் பாட்டில் அலைகளின் அதிர்வில்
மாறுவேடம் போட்டபடி
நீயே எங்கும் நிறைந்துள்ளாய் இசையே!


நதி -
நடந்துபோகும் சங்கீதம்

மழை -
அவரோகண சங்கீதம்

மழலை -
பிழைகளின் சங்கீதம்

மெளனம் கூட
உறைந்துபோன சங்கீதம்

பூமி சுற்றிக் காற்று
காற்று சுற்றி இசை
இசைக்குள் மிதக்குகம்
ஜீவராசிகள்

இசையே!
தூங்கவை எங்களை

உன் மயிற்பீலி விரல்கொண்டு
மனசு தடவு

இரத்தக் குழாய்களின்
துருக்கள் துலக்கு

உள்ளிருக்கும் விலங்குத்தோல்
உரி

மென்குணங்கள் மேம்படுத்து

நாங்கள்
இறுகி இறுகிக்
கல்லாகும்போது
இளகவிடு

குழைந்து குழைந்து
கூழாகும்போது
இறுகவிடு

நீயில்லாத பூமி
மயானம்

மன்னித்துவிடு
மயானத்திலும் இசை உண்டே.


No comments:

Post a Comment