வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சிட்டுக் குருவி -வைரமுத்து

நீல மலைச்சாரல் – தென்றல்
நெசவு நடத்துமிடம்
ஆல மரக்கிளைமேல் – மேகம்
அடிக்கடி தங்குமிடம்

எந்திர ஓசைகளைக் – கழற்றி
எங்கோ எறிந்துவிட்டு
மந்திரம் போட்டதுபோல் – ஒரு
மெளனம் வசிக்குமிடம்

கட்டடக் காடுவிட்டு – நிழல்
கனிகின்ற காடுவந்தேன்
ஒட்டடை பிடித்தமனம் – உடனே
உட்சுத்தம் ஆகக்கண்டேன்

வானம் குனிவதையும் – மண்ணை
வளைந்து தேடுவதையும்
காணும் பொழுதிலெல்லாம் – ஒரு
ஞானம் வளர்த்திருந்தேன்

வெவ்வேறு காட்சிகளால் – இதயம்
விரிவு செய்திருந்தேன்
ஒவ்வோர் மணித்துளியாய் – என்
உயிரில் வரவுவைத்தேன்


சிட்டுக் குருவியன்று – ஒரு
சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல் – என்னை
வாவென்றழைத்தது காண்

மொத்தப் பிரபஞ்சமும் – என்
முன்னே அசைவதுபோல்
சித்தப் பிரமைகொண்டு – அந்தச்
சிட்டை ரசித்திருந்தேன்

அலகை அசைத்தபடி – அது
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டுச் – சற்றே
உயரப் பறந்ததுவே

பறக்க மனமிருந்தும் – மனிதன்
பறக்கச் சிறகுமில்லை
இறக்கை துடிக்கையிலே – என்
இமைகள் துடிக்கவில்லை

சொந்தச் சிறகுகளில் – வானைச்
சுருட்டி எடுத்துக் கொள்ளும்
இந்தக் குருவியினும் – மனிதன்
எங்ஙனம் உயர்ந்துவிட்டான்?

கீச்சுச் கீச்சென்றது – என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே – என்மேல்
பிரியமா என்றது


அறிவுக்கு விரிவுசெய்ய – மனிதர்
ஆயிரம் மொழிகாண்பினும்
குருவிக்கு விடையிறுக்க – ஒரு
குறுமொழி கண்டதுண்டா?

ஒற்றைச் சிறுகுருவி – நடத்தும்
ஓரங்க நாடகத்திலே
சற்றே திளைத்திருந்தேன் – காடு
சட்டென்று இருண்டதுகாண்

மேகம் படைதிரட்டி – வானை
மிரட்டிப் பிடித்ததுகாண்
வேகச் சுழற்காற்று – என்னை
விரட்டியடித்துது காண்

சிட்டுச் சிறுகுருவி – பறந்த
திசையும் தெரியவில்லை
விட்டுப் பிரிந்துவிட்டேன் – விரைந்து
வீட்டுக்கு வந்துவிட்டேன்


வானம் தாழ்திறந்து – இந்த
மண்ணில் வீழ்ந்ததென்ன
காணும் திசைகளெல்லாம் – மழையில்
கரைந்து போனதென்ன

மின்னல் பறிக்குதென்று – சாரல்
வீட்டில் தெறிக்குதென்று
ஜன்னல் அடைத்துவைத்தாள் – மனைவி
தலையும் துவட்டிவிட்டாள்

அந்தச் சிறுகுருவி – இப்போ(து)
அலைந்து துயர்ப்படுமோ?
இந்த மழைசுமந்து – அதன்
இறக்கை வலித்திடுமோ?

காட்டு மழைக்குருவி – போர்த்தக்
கம்பளி ஏதுமில்லை
ஓட்டை வான்மறைக்க – அதன்
உயரே கூரையில்லை

கூடோ சிறுபுதரோ – இலைக்
குடைக்கீழ் ஒதுங்கிடுமோ?
தேடோ தேடென்று – இடம்
தேடி அலைந்திடுமோ?

பெய்யோ பெய்யென்று – மழை
பெய்தால் என்ன செய்யும்
அய்யோ பாவமென்று – குருவி
அழுவதை நினைத்திருந்தேன்


காட்டில் அந்நேரம் – நிகழ்ந்த
கதையே வேறுவிதம்
கூட்டை மறந்துவிட்டுக் – குருவி
கும்மியடித்ததுகாண்

வானப் பெருவெளியில் – கொட்டும்
மழையில் குளித்ததுகாண்
கானக் கனவுகளில் – அது
கலந்து களித்ததுகாண்

சொட்டும் மழைசிந்தும் – அந்தச்
சுகத்தில் நனையாமல்
எட்டிப் போனவனை – அது
எண்ணி அழுதது காண்

No comments:

Post a Comment